வேலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
வேலூர் அருகேயுள்ள கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் செல்வம்.. 42 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். தற்போது தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு சித்ரா (36) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது.. தற்போது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இந்த சூழலில் மனைவி சித்ராவுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாற இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த செல்வம் தன்னுடைய மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று சித்ராவிடம் (அம்மா) அவருடைய மகள் கள்ளக்காதலை கைவிட்டுவிடும்படி கூறியுள்ளார். அப்போது கோபமடைந்த சித்ரா தனது மகளை கடுமையாக அடித்தார். இதையடுத்து நடந்தது பற்றி அவருடைய மகள் மொபைல் போன் மூலம் செல்வத்திடம் (அப்பா) கூறியுள்ளார்.
பின்னர் இரவு பணியிலிருந்து வந்த செல்வம் இதுபற்றி மனைவியிடம் கேட்டதால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் வீட்டிலிருந்த கட்டையால் சித்ராவின் தலையில் ஓங்கி பலமாக அடித்தார். பலத்த காயம் அடைந்த அவர் சரிந்து விழுந்து இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.