வாணியம்பாடியில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கோயிலுக்கு சென்ற கோனாமேடு பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை, நூருல்லாபேட்டை பகுதியில் வசித்துவரும் 17 வயது சிறுவன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிறுமியின் பெற்றோர் ஸ்டேஷனில் புகாரளித்திருப்பதை அறிந்த சிறுவன், சிறுமியை வாணியம்பாடியில் விட்டு விட்டு சென்றுள்ளார்.
அதனைத்தொடர்ந்து வீட்டுக்கு சென்ற சிறுமி நடந்ததை எல்லாம் அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனது மகளை ஆசை வார்த்தை கூறி, கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.. அந்தபுகாரின் பேரில் போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.