சாத்தான் குளத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற 21 டன் ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இருக்கும் அரசூர் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் அரசின் விலையில்லா ரேசன் அரிசி 21 டன் எடை கொண்ட 420 மூட்டைகளை வெளி மாநிலங்களுக்கு கடத் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது.
அதனைத்தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஎஸ்பி இளங்கோவன் உத்தரவின் படி, தூத்துக்குடி காவல் ஆய்வாளர் செல்வி, காவல் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் ரேசன் அரிசி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட கண்ணன் (வயது 50), லிங்கேஷ், சுயம்புலிங்கம், பாபு, சுவாமிநாதன், நல்லரசு உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டன.. அரிசி மூட்டைகள் விசாரணைக்கு பின் மாவட்ட உணவு பாதுகாப்பு கிட்டங்கில் ஒப்படைக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.