சிறுமியை திருமணம்செய்த இளைஞர், திருமண நிகழ்வில் நண்பர்கள் எடுத்த டிக் டாக் வீடியோவால் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் 17 வயதுடைய மகள் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் அவருக்கும் பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய பழனிசாமி என்ற இளைஞருக்கும் கடந்த 3ஆம் தேதி (புதன்கிழமை) மணமகனுடைய வீட்டில் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது மணமகனின் நண்பர்கள், புதுவீட்டிற்கு வருகைதந்த தம்பதியினரை, ‘மருமகளே! மருமகளே! எங்க வீட்டு மருமகளே’ என்ற திரைப்படப் பாடலுக்கு டிக் டாக் எடுத்து வீடியோ வெளியிட்டனர்.. அந்த டிக் டாக் வீடியோவை பார்த்த அப்பகுதி மக்கள் சிலர், 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளதாக 1098 எண்ணுக்கு போன் செய்து புகார் செய்து விட்டனர். அத்துடன் அந்த வீடியோவும் இணைக்கப்பட்டு அனுப்பப்பட்டது.
அதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு குழந்தைத் திருமணம் நடந்துள்ளதை உறுதிசெய்தனர். இதையடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த இரு வீட்டு பெற்றோர்கள் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.