மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது என தெரிவித்தார்.இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை, எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் என கூறியுள்ளார்.
இந்தியா எப்போதும் தனக்கான பிரச்சினைகளை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்காக துக்கத்தில் இருக்கிறது. தங்கள் குடும்பத்தில் ஒருவர் உயிர் இழந்தாலும் அடுத்தவரை இந்த நாட்டுக்காக அனுப்ப பலர் முன் வந்துள்ளனர். நமது இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.
நட்பை பெறுவது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும், கண்ணுக்கு கண் என்று வந்தால் பதிலடி கொடுக்கவும் தெரியும் என தெரிவித்த பிரதமர், சுய சார்பை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது, நாடு சவால்களை சந்தித்து வரும் இந்த கால கட்டங்களில் பல்வேறு புதிய உருவாக்கங்களும் நடைபெற்றுள்ளன என குறிப்பிட்டார்.
மேலும் ஊரடங்கு தளர்வு 2 விஷயங்கள் மிக முக்கியமானவை. கொரோனாவை வீழ்த்தவேண்டும் மற்றொன்று பொருளாதார நடவடிக்கை என தெரிவித்தார். முக கவசம் அணிய வில்லை என்றாலோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றாலோ, உங்கள் உயிரை மட்டுமின்றி மற்றவர்களின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறீர்கள் என்று அர்த்தம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.