கிரீன் பாஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர்.
இத்தாலியின் தலைநகரான ரோமில் உள்ள Piazza del Popoloவில் இருக்கும் பிரதமரின் அலுவலகம் முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவரின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். முக்கியமாக இந்தப் போராட்டத்தை கொரோனா தொற்றிற்கான கிரீன் பாஸ் தேவையை அனைத்து பணியிடங்களுக்கும் நீட்டிக்கும் இத்தாலி பிரதமரான மரியோ டிராகியின் செயலுக்கு எதிராக வலதுசாரி குழு உறுப்பினர்கள் நடத்தியுள்ளனர். அதிலும் இப்போராட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதி பெற்று இருந்தாலும் பலர் குறிப்பிடப்பட்டிருந்த வரிசையை விட்டு வெளியேறி பாராளுமன்றத்திற்கு ஊர்வலமாக செல்ல முயற்சித்துள்ளனர்.
மேலும் தீவிர வலதுசாரி உறுப்பினர்களான ஃபோர்ஸா நுவா அமைப்பினர் இத்தாலிய தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் தலைமையகத்தை தாக்கினர். இதனை தொடர்ந்து தலைமையகத்தை ஆக்கிரமிப்பும் செய்தனர். இதனால் போலீசார் தண்ணீர் பீச்சியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை கலைக்க முற்பட்டுள்ளனர். இந்த மோதலின் போது பல்வேறு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஒரு குழு பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது அவர்களை கட்டுப்படுத்துவதற்காக இத்தாலி காவல்துறையினர் அவர்களை சூழ்ந்துகொண்டனர்.
இந்த நிலையில் இத்தாலியில் உள்ள பல்வேறு நகரங்களில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பிரச்சாரத்தை முடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிலும் அனைத்து பணியிடங்களுக்கும் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் கிரீன் பாஸ் திட்டம் நீட்டிக்கப்படும் என்று மூன்று வாரங்களுக்கு முன்பாகவே பிரதமர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.