பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் எம். சுந்தரேசன் தலைமை தாங்கினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆர். ஆனந்தன், தங்கபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் சாதிக், கேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் பெட்ரோல், டீசல் விதித்துள்ள வரியை குறைத்து பெட்ரோல் 1 லிட்டர் 50-ரூபாய்க்கும், டீசல் 40-ரூபாய்க்கும் விற்பனை செய்ய நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்து வரும் அனைவருக்கும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சாமிகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைச்செயலாளர் நந்தி, புஷ்பராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகிலும், ஆசிரியர் நகர் பேருந்து நிலையம் அருகிலும் கண்டன போராட்டம் நடைபெற்றது.