பெரியாரை விமர்சித்து பேசியர்வள் எல்லோரும் காணாமல்போயுள்ளனர். ஆனால், பெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் கி. வீரமணி கூறியுள்ளார்.
மதுரை ஹர்வேய்பட்டியைச் சேர்ந்த மறைந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமசாமி என்பவரின் உடலை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆராய்ச்சிக்காக தானம் வழங்கும் நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், “நீட் தேர்வால் எட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நீட் ரத்து செய்யப்பட வேண்டும். மத்திய கல்விக் கொள்கையை மத்திய அரசைவிட விரைவாக செயல்படுத்தி மத்திய அரசுக்கு ராஜ விசுவாசமாக தமிழ்நாடு அரசு இருக்கிறது.
5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மத்திய, மாநில அரசு நீட் தேர்வை கைவிட வேண்டும், மாணவர்களுக்கு தேர்வு என்ற மன அழுத்தம் தரும் நடைமுறையை அரசு திரும்பப் பெற வேண்டும்.
பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, மன்னிப்பு கேட்பது என்பது மனித பண்பாட்டின் பெருந்தன்மை, ரஜினி பெரியார் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசியுள்ளார்.
அதனால், ரஜினி நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளது. பெரியார் குறித்து பேசியபோது ஆதாரமாகத் துக்ளக்கை ஏன் காட்டவில்லை? அதில் உண்மை இல்லை என்பதுதான் அர்த்தம்.
பெரியாரை கொச்சைப்படுத்தி பேசியவர்கள் ஆயிரமாயிரம் பேர் காணாமல்போயுள்ளனர். ஆனால், பெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்” எனக் கூறினார்.