குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு விட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தகட்டூர் பகுதியில் ஊத்தா வெட்டிகுளம் உள்ளது. இந்த குளம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டதாகும். தற்போது இந்த குளத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் ஆகாயத்தாமரை குளம் முழுவதும் பரவி புதர் போல் காட்சி அளிக்கிறது. இவ்வாறு புதர்கள் மண்டி கிடப்பதால் குளத்தில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் செல்வதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர்.
மேலும் கழிவு பொருட்கள் குளத்தில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றி தூர்வாரி சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.