கல்குவாரி பாறை இடிந்து இறங்கிய விபத்தில் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் சென்னையை சேர்ந்த ஆறுமுகசாமி, சரவணகுமார், தேவராஜன் மற்றும் சேகர் போன்றோருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த கல்குவாரியில் காலை 9 மணி அளவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 200 அடி பள்ளத்தில் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகள் உதவியுடன் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கல்குவாரியில் மேல் பகுதி பாறை இடிந்து பள்ளத்திற்குள் விழுந்து விட்டது.
இந்த கற்குவியல்களுக்குள் சிக்கி ஈரோடு மாவட்டத்தில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இந்த விபத்து குறித்து உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து மருத்துவ துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் போன்ற பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கற்குவியல் சிக்கி இருந்த 9 பேரை உயிருடன் மீட்டனர்.
அவர்களில் 2 பேர் படுகாயம் அடைந்ததால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையானது அழைத்து வரப்பட்டது. மேலும் காவல்துறை டி.ஜி.பி சாமுண்டீஸ்வரி மற்றும் தீயணைப்புத் துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இருந்த காவல் துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்த பெரும் விபத்தில் உயிரிழந்த மணிகண்டனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.