வெடி விபத்தில் தந்தை உட்பட இரண்டு மகன்களை இழந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லத்தேரி கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வித்யா என்ற மகளும் தனுஜ், தேஜஸ் என்ற இரண்டு பேர குழந்தைகளும் இருந்துள்ளனர். இவர் லத்தேரி பேருந்து நிலையத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தார். இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி 12 மணியளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் பட்டாசை வெடித்து காண்பிக்க கூறியுள்ளார். இந்நிலையில் மோகன் பட்டாசு வெடித்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் அவர் கடையில் இருக்கும் பட்டாசுகள் மீது விழுந்ததால், அங்கிருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. இதனால் பயந்து ஓடிய மோகனின் பேரனான தனுஜ் மற்றும் தேஜஸ் கடைக்குள் சென்றுள்ளனர். இதையடுத்து கடைக்குள் சென்ற பேரன்களை காப்பாற்றும் முயற்சியில் மோகன் ஈடுபட்டபோது தீ விபத்தில் சிக்கிக் கொண்டார்.
மேலும் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து கருகியதால் மோகனுடன் சேர்த்து அவருடைய பேரனான தனுஜ், தேஜஸ் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக வித்யா தன் கணவரைப் பிரிந்து தன் மகன்களுடன் மோகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஆறுதலாக இருந்த தந்தை மற்றும் தன் மகன்களை பட்டாசு விபத்தில் இழந்ததால் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார்.
இதையடுத்து வித்யா அதிகாலை 2 மணியளவில் காணாமல் போனதால் உறவினர்கள் தேடி கொண்டு இருந்தனர். அப்போது லத்தேரி ரயில் நிலையத்தில் ஒரு பிணம் கிடப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சடலமாக கிடந்த பெண் வித்யாதான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வித்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில் தனது இரண்டு மகன்களையும் தந்தையும் ஒரே நேரத்தில் இழந்த மனவேதனையினால் வித்யா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.