பரவலாக மழை பெய்ததால் அணை நீர்மட்டமானது 31 அடியாக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்திருக்கிறது. இந்நிலையில் கோமுகி அணையின் மொத்த நீர்மட்டமானது 46 அடி ஆகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலமாக கல்வராயன்மலை அடிவாரம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் 11,௦௦,௦௦௦ ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இதனையடுத்து கடந்த வருடம் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதன்பின் அணையின் நீர்மட்டம் 25 அடியாக குறைந்ததால் மீன் வளர்ப்புக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வெப்ப சலனம் காரணமாக கடந்த ஒரு வார காலமாக கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொட்டியம் மற்றும் கல்படை ஆகிய ஆறுகளின் வழியாக அணைக்கு வினாடிக்கு 400 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து 25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது ஒரு வாரத்திற்குள் 6 அடி உயர்ந்து 31 அடியாக அதிகரித்துள்ளது. மேலும் வினாடிக்கு 100 கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டு இருப்பதினால் அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.