தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் அருகே கைலாச பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் சேலம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசி வாழ்த்துக்களை பெற்றார்கள். அதன் பிறகு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எடப்பாடி ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த இயக்கம். இந்த இயக்கத்தில் அடிமட்ட தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்பதுதான் ஐயா ஓபிஎஸ் நோக்கம்.
ஆனால் அதற்கு எதிர் மாறாக எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்ட முயற்சி செய்துள்ளார். ஓபிஎஸ் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் தொடர வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் இயக்கமாக அதிமுகவை மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதை தடுப்பதற்காக தான் நாங்கள் ஓபிஎஸ் தலைமையில் புதிய கழகத்தை ஏற்றுள்ளோம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில் ஓபிஎஸ் கூட்டம் நடத்தினால் இன்னும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் இணைவார்கள். அதன் மூலம் ஓபிஎஸ் யார் என்பது பலருக்கும் தெரியும். ஓபிஎஸ்-ஐ சந்திக்கும்போது ஒரு நல்ல தலைவருக்கு உண்டான பண்பு தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்தால் சுயநலக்காரராகவே தெரிகிறது என்று கூறினார். மேலும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 200-க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசியதால் எடப்பாடி பழனிச்சாமி பெரும் கலக்கத்தில் இருப்பதாக் கூறப்படுகிறது.