திண்டுக்கல்லில் அமையவுள்ள புதிய மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது.
அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது. 5 கட்டங்களாக அடிக்கல் நாட்டும் பணிகளானது நடைபெறும் என கூறப்பட்டது.
முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட மக்களின் 30 ஆண்டு கோரிக்கையை ஏற்று கடந்த வாரம் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 25 ஏக்கரில் ரூ.348 கோடி மதிப்பில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று மூன்றாம் கட்டமாக திண்டுக்கல்லில் புதிதாக அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
திண்டுக்கல்லில் ரூ.340 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இந்த மருத்துவ கல்லூரிக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டி பணிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்துஉள்ளார்.விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.