பல சத்துக்களை உள்ளடக்கிய முருங்கை கீரை சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
பாலைவிட 4 மடங்கு அதிகமாக கால்சியம் இதில் இருக்கிறது. அது மட்டுமின்றி பொட்டாசியம், இரும்புச்சத்து இவையும் அதிகமாகவே உள்ளது. அதனால் இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவிலே இருக்கும்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 50 கிராம்
மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
நல்ல எண்ணெய் – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
சாம்பார் பொடி – கால் டீஸ்பூன்
முருங்கைக்கீரை – 2 கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப் அளவு
நெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் துவரம் பருப்புடன் மஞ்சள் பொடி மற்றும் நல்ல எண்ணெய் சேர்த்து நன்றாக குழைய வேக வைத்து அந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சீரகம், மிளகு எடுத்து பொடியாக்கி கொள்ளுங்கள். பிறகு பூண்டை தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். 2 கைப்பிடி அளவு முருங்கை கீரை எடுத்து நன்கு சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் இடித்து வைத்திருக்கும் மிளகு, சீரகப் பொடி முக்கால் அளவும், சாம்பார் பொடியும் சேர்த்து கிளறிவிட்டு, அதனுடன் கீரை, சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி விடுங்கள். கிளறிய பின்னர் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள்.
நன்றாக கொதித்து இரண்டு கப் அளவு தண்ணீர், ஒரு கப் அளவிற்கு வற்றும்படியாக கொதிக்க விடவும். பின்னர் வேகவைத்த கீரை தண்ணீரை தனியாக வடிகட்டி கொள்ளுங்கள். அதோடு பருப்பு தண்ணீரையும் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிடுங்கள். கொதித்ததும் தாளித்து ஊற்ற வேண்டும். அதற்காக அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி, சூடானதும், தட்டி வைத்திருக்கும் பூண்டு மற்றும் சீரக, மிளகு பொடியை சேர்த்து ஊற்ற வேண்டும்.
இப்பொழுது சத்து நிறைந்த சுவையான முருங்கைக்கீரை சூப் ரெடி..!