டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது.
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் இந்த சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக மாதேவேரே மற்றும் கிரேக் எர்வின் இருவரும் களமிறங்கினர்..
ஜிம்பாப்வே அணி நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில், 5ஆவது ஓவரில் எர்வின் 19 ரன்களுக்கு அவுட் ஆனார். 42 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது ஜிம்பாப்வே. அதன்பின் அடுத்த ஆறாவது ஓவரில் மற்றொரு துவக்க வீரர் மாதேவேரே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்தா மில்டன் ஷும்பா 8 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சீன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா இருவரும் கைகோர்த்து சிறிது நேரம் நிலைத்து நின்ற நிலையில், சதாப்கான் வீசிய 14 வது ஓவரில் 5ஆவது பந்தில் சீன் வில்லியம்ஸ் 31 ரன்களில் அவுட் ஆனார்.
அதன் பின் அடுத்த பந்திலேயே கேப்டன் ரெஜிஸ் சகப்வா டக்அவுட் ஆகி வெளியேறினார்.. அதனைத் தொடர்ந்து முகமது வசிம் வீசிய 15 வது ஓவரில் 3ஆவது பந்தில் சிக்கந்தர் ராசா (9), 4ஆவது பந்தில் லூக் ஜாங்வே டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். அடுத்தடுத்து தொடர்ந்து 4 விக்கெட் விழுந்ததால் ஜிம்பாப்வே அணி 14.4 ஓவரில் 95/7 என திணறியது. பின் பிராட்லி நீல் எவன்ஸ் 19 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியில் ரியான் பர்ல் 10* மற்றும் ரிச்சர்ட் ங்கராவா 3* ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருக்க, 20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகள் இழந்து 130 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது வசிம் 4 விக்கெட்டுகளும், சதாப் கான் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கி பேட்டிங் ஆடி வருகிறது..