டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் பதான் படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து உள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடிஆக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் 2023ம் வருடம் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் முதல் பாடல் “பேஷ்ரம் ரங்” வெளியாகியுள்ளது.
முதல் பாடலை பார்த்ததும் சமூகவலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும்போது பதான் 2023-ம் வருடத்தின் பெரிய படம் என கூறப்படுகிறது. ஒரே நாளில் இப்பாடல் 1.9 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இப்படத்திற்காக தீபிகாபடுகோன் ரூ.15 கோடி சம்பளம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வழக்கமான சம்பளத்தைவிட 50% கூடுதல் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதில் நீச்சல் உடையில் தீபிகா படுகோன் கவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த போதிலும், இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.
அதன்படி மத்தியப்பிரதேசம் உள்துறை மந்திரியான நரோத்தம் மிஸ்ரா தீபிகா படுகோனின் பதான் திரைப்படத்தில் பாடல் காட்சியின் உடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “பாடல் காட்சியில் தீபிகா அணிந்துள்ள பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்குரியது ஆகும். இப்பாடல் அசுத்தமான மன நிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே பேஷ்ரம் ரங் பாடலின் வரிகள் மற்றும் பாடல் காட்சிக்கான உடைகள் திருத்தப்படவேண்டும். இல்லையென்றால் மாநிலத்தில் படத்தை திரையில் வெளியிட அனுமதிக்க வேண்டுமா..? இல்லையா..? என்பது பரிசீலனை செய்யப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.