பால் உற்பத்தியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பால் உற்பத்தியாளர்கள் பால் பாக்கி தொகையை உடனடியாக உற்பத்தியாளர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி, மாநில செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை, பாக்கித் தொகையை உற்பத்தியாளர்களிடமிருந்து பால் லிட்டருக்கு ரூ.10 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் தமிழக அரசு பால் விற்பனை விலையை குறைத்ததால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முகமது அலி நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு பாக்கி தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்த பணத்தை உற்பத்தியாளர்களுக்கு வரும் 20-ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றார். இதனையடுத்து பால் உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் வெங்கடபிரியாவை சந்தித்து மனு வழங்கினர்.