கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 90 வயதான பெண் ஒருவருக்கு ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் ஆல்ஸ்ட் நகரில் உள்ள OLV மருத்துவமனையில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி 90 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினமே பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனால் ஆரம்பத்தில் அவருடைய ஆக்சிஜன் அளவு சீராக இருந்த நிலையில் அடுத்த சில நாட்களில் நிலைமை மோசமாகியதால் அவர் 5 நாட்களில் இறந்துவிட்டார். இந்நிலையில் அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் ஆல்பா மற்றும் பீட்டா வகை கொரோனா வைரஸ் இந்தப் பெண்ணை தாக்கி இருப்பதாக சோதனையில் கண்டறிந்தனர்.
இதில் ஆல்பா வகை வைரஸ் பிரிட்டன் நாட்டிலும் பீட்டா வகை வைரஸ் தென் ஆப்பிரிக்கா நாட்டிலும் பரவிய நிலையில் பெல்ஜியத்தை சேர்ந்த பெண்ணுக்கு 2 வகையான பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மூலக்கூறு உயிரியலாளர் ஆனி கூறும்போது, “பெல்ஜிய நாட்டில் ஆல்பா மற்றும் பீட்டா வகை கொரோன வைரஸ் பரவியபோது இந்தப் பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டிருந்த இருவேறு நபர்களிடமிருந்து இந்தப் பெண்ணிற்கு தொற்று பரவியிருக்கலாம். ஆனால் இந்த தொற்று எப்படி பரவியது என்பது தெரியவில்லை என்றும் இதுகுறித்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும்”, அவர் கூறினார் .