Categories
அரசியல் மாநில செய்திகள்

“எடப்பாடி பழனிசாமிக்கு தில் இல்லை”… வெளிநடப்பு செய்தபின் துரைமுருகன் காட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக அரசுக்கு தில் இல்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க திமுக அனுமதி கோரியது. அதற்கு பேரவைத் தலைவர் தனபால் மறுப்பு தெரிவித்ததையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுபோல், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஆனால், அத்தகைய தீர்மானத்தை இயற்ற இந்த அரசு அஞ்சுகிறது. மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர அதிமுகவிற்கு தில் இருக்க வேண்டும். அத்தகைய தில் இவர்களுக்கு இல்லை. இதுகுறித்து கேட்டால், தீர்மானம் இன்னமும் ஆய்வில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆய்வில் இருக்கிறது என்பதற்கு ஆயுள் இல்லை என்று பொருள். பிகார், ஆந்திரா, கேரளா போன்ற மாநில முதலமைச்சர்களுக்கு இருக்கும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை’ என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |