இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மருந்து பற்றாக்குறையால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களுக்கான விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், அங்கு ஒரு மருத்துவமனையில், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையிலுள்ள அந்த மருத்துவமனைக்கு உதவிகள் அளிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த தகவல் அதிக வருத்தமளிப்பதாகவும், அந்த மருத்துவமனைக்கு உதவிகள் அளிக்க இந்திய தூதரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.