தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் புதிய டிஜிபியாக பதவியேற்ற சைலேந்திரபாபு கடந்த டிசம்பர் மாதம் ஆப்ரேஷன் கஞ்சா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த ஆப்ரேஷன் கஞ்சா திட்டத்தின் மூலம் மாநில முழுவதும் போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு போதைப்பொருள் பறிமுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சோதனையின் போது பல நூறு டன்கள் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் போதைப்பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டபவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் என அரசு அறிவித்ததால், தற்போது வரை 2000 வங்கி கணக்குகள் முடக்கப் பட்டுள்ளதாகவும், பல்வேறு நபர்களின் அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வங்கி கணக்கில் மட்டுமே 50 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் முடக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.