கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அரசு பள்ளிகளில் சுவாமி விவேகானந்தரின் பெயரில் 8,100 புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டமானது குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று முதன் முதலாக கலகபுரி மாவட்டத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பிரியங்க் கார்கே எதிர்ப்பு தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு இல்லாமல் மற்றும் படிப்பில் இருந்து பாதியில் மாணவர்கள் வெளியேறுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது.
இந்த பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத அரசு தற்போது காவி நிறத்தை பள்ளிகளில் அடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் பசுவராஜ் பொம்மை குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் பசுவராஜ் பொம்மை பேசினார். அவர் பேசியதாவது, இது போன்ற விஷயங்களில் அரசியல் செய்வது சரி கிடையாது. காவி என்பது தேசியக் கொடியில் ஒரு நிறம். மேலும் இதை பார்க்கும் போது காங்கிரசுக்கு எதற்காக அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.