விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மறைந்த தமிழா முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தலா ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும் என தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவர் விருதுநகர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி, மருத்துவமனை வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய காலகட்டத்தில் மரம் வளர்ப்பது மிகவும் அவசியமானதாகும். மரம் வளர்ப்பதன் மூலம் சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தவிர்க்க முடியும் என்றும், மழை பொழிவை அதிகரிக்க முடியும் என்றும் கண்ணன் கூறியுள்ளார்.