உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் ரோஷன் எழுதியுள்ள அந்த கடிதத்தில், உள்ளூர் அளவில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் மாவட்ட அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பூகோள பரவல், மருத்துவ உள்கட்டமைப்பு, மனிதவளம் கட்டுப்பாட்டுப் பகுதிகள் குறித்த தகவல்களை தெரிவித்தல் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மாவட்ட அளவிலேயே முடிவுகளை எடுக்கும் வகையில் தகவல்கள் இருக்க வேண்டும். இந்த யுக்தி மூலம் உள்ளூர் அளவில் கொரோனா மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்தவொரு மாவட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மாநில அரசுகளும் ஒன்றியப் பிரதேச அரசு முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் டெல்டா வகை வைரஸை காட்டிலும் ஒமைக்ரான் வைரஸ் 3 மடங்கு அதிவேகத்தில் பரவுவதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது என்றும், கடிதத்தில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒமைக்ரான் ஒரு புறம் பரவி வரும் அதே நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெல்டா வகை வைரஸ் பரவி வருவதாகவும் இந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.