டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் பிஎச்.டி. பயின்று வரும் மாணவி ஒருவர் வளாகத்தின் கிழக்கு வாசல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 11.45 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென்று வளாகத்தின் உள்ளே இருந்து பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் பேசியுள்ளார். இதையடுத்து மர்ம நபர் அந்த மாணவியை அருகே இருந்த புதருக்குள் தரதரவென இழுத்து சென்று அவரிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மாணவி பயங்கரமாக அலறியதால் பயந்துபோன மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு இரவு 12.45 மணிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனிடையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள மாணவி மறுத்து விட்டார். இதில் மாணவியின் செல்போனையும் அந்த நபர் பறித்து சென்றுள்ளார். மாணவி, அந்த நபரை சரியாக அடையாளம் காட்டுவேன் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.