அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி, நெல்லை மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை டவுன் தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். தேர்தல் நேரத்தில் நான் முதல்வரானால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றால் ஜனாதிபதி நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட வேண்டும். முதல்வர் மட்டும் கையெழுத்து போட்டால் நீட் தேர்வு ரத்தாகுமா ? என்று கேட்டு திமுகவை சாடினார். மேலும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று ஸ்டாலின் கூறினார். இன்னும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று கூறினார். இன்னும் அதுவும் ரத்து செய்யப்படவில்லை என ஓ. பன்னீர்செல்வம் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.