இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 162 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியுள்ளது. இதில் மக்கள் பலரும் திறந்த வெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன் அலறி அடித்தபடி ஓடி வந்தனர். இதனையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சியாஞ்சூர் நகரம் இந்த நிலநடுக்கத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட சியாஞ்சூரில் 46 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக தற்போதைய நிலவரப்படி 162 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.