பைபாஸ் சாலையை கடக்க முயற்சிக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுங்கம்-உக்கடம் பைபாஸ் சாலையை அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று உள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.