தமிழ் பேசக்கூடாது என்று கூறியதற்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கிடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம். மொழி பிரச்னையால் யாருக்கேனும் புரியாமல் இருப்பதை தவிர்க்க ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற வேண்டும் என்று தெற்கு ரயில்வே அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், இருப்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம். ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது ஆட்டின் குரல்வளையைத்தான். கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு” என்று கூறியுள்ளார்.
இருப்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம்.
ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது
ஆட்டின் குரல்வளையைத்தான்.
கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள்
மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்.
வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு.#tamil @tamilnadu— வைரமுத்து (@Vairamuthu) June 14, 2019