நாமக்கல் மாவட்டத்தில் முறையான உரிமம் பெறாமல் கொரோனா பரிசோதனை செய்த 15க்கும் மேற்பட்ட ஆய்வகங்களுக்கு சுகாதார துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகம் என 5 இடங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உரிய அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் பல தனியார் ஆய்வகங்களில் முறையான உரிமம் பெறாமல் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து சேலம் மற்றும் கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி முடிவுகளை சேகரிக்கின்றனர்.
அதன் முடிவுகளை முறையாக சுகாதாரத்துறையினருக்கு தெரியப்படுத்துவது இல்லை என குற்றசாட்டு இருந்து வருகின்றது. இதனால் கொரோனா நோயாளிகளை கண்டறிவதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடமிருந்து முறையான உரிமம் பெறாமல் கொரோனா பரிசோதனை செய்த 15க்கும் மேற்பட்ட தனியார் ஆய்வகங்களுக்கு சரியான விளக்கம் கேட்டு சுகாதாரத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.