செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக வந்த வட மாநிலத் தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள பிள்ளை குளம் பகுதிக்கு வெளிமாநிலத்தில் இருந்து சிலர் செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இவ்வாறு வேலைக்கு சென்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நேபால் சர்தார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஹாடியா ஆகிய இரண்டு வாலிபர்கள் வாந்தி எடுத்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் இருவரையும் ஆட்டோவில் கடையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் பஹாடியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் தென்காசி அரசு மருத்துவமனையில் நேபால் சர்தார் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கடையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.