கட்டுமான பணியின் போது வடமாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டி ஐ.ஐ.டி-யில் மெக்கானிக்கல் துறைக்கு கட்டிடம் கட்டுமான பணியானது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குஜராத் கட்டுமான நிறுவனம் ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக இந்த கட்டடத்தை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது மாடியில் சாரம் கட்டும் பணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார். அப்போது மனோஜ் நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் எந்தவித உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்களை நிறுவனத்தினர் பணியில் ஈடுபடுத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்களான சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் சத்யராஜ் மற்றும் குஜராத்தை சேர்ந்த சஞ்சய் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.