வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில் நேற்று 4-ஆவது முறையாக மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
வடகொரியா அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளை அடிக்கடி பரிசோதித்து உலகநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில், குறிப்பாக ஜப்பான் தென்கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை பயமுறுத்தும் விதத்தில்தான் வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்து வருகிறது.
இதனிடையே இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே வட கொரியா ஏவுகணை பரிசோதனையை அதிகப்படுத்தியிருக்கிறது. அதன்படி, கடந்த 5ம் தேதி அன்று ஏவுகணை பரிசோதனை செய்தது. அதனைத்தொடர்ந்து 11 ஆம் தேதியன்று ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையை செய்தது.
கடந்த 15ஆம் தேதி அன்று, இரு ஏவுகணைகளை ரயிலிலிருந்து ஏவி பரிசோதித்தது. இந்நிலையில், வடகொரியா 4-வது முறையாக, நேற்று ஏவுகணை பரிசோதனை செய்திருக்கிறது. அதாவது, சுமார் 13 நாட்களில் 4 தடவை ஏவுகணை சோதனை நடத்தியிருக்கிறது. வானத்தில் இருக்கும் போதே இலக்குகளை நிர்ணயித்து அழிக்கக்கூடிய ஏவுகணையை நேற்று பரிசோதனை செய்ததாக வடகொரியா இன்று தெரிவித்திருக்கிறது.