விழுப்புரம் மாவட்டத்தில் கொண்டங்கி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சக்திவேல் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டையில் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஆரோக்கியநாதன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சக்திவேலும் அவரது நண்பரான பசுபதியும் அறந்தாங்கியைச் சேர்ந்த சாந்தி மீனா, ஆரோக்கியநாதன் ஆகிய இருவரையும் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது சாந்தி மீனா தன்னுடைய 73 பவுன் நகை அடகு கடையில் இருப்பதாக பசுபதி சக்திவேலிடம் கூறியுள்ளார். மேலும் அந்த நகைக்கு உரிய அடமான பணமான ரூபாய் 15,67,000 த்தை கொடுத்துவிட்டு நகையை எடுத்துக் கொள்ளுமாறும் சாந்தி மீனா கூறியுள்ளார்.
இதனை நம்பி பசுபதியும் சக்திவேலும் மற்றொரு நண்பரான ஜெய சக்தியிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து சக்திவேல், ஜெயசக்தி, பசுபதி ஆகிய மூவரும் இணைந்து ரூபாய் 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு சாந்தி மீனாவை சந்திக்க சென்றுள்ளனர். அப்போது சாந்தி மீனா அடகு கடைக்கு சென்று எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்பதை கேட்டு சொன்ன பிறகு பணத்தை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று பசுபதி, சக்திவேல், ஜெயசக்தியிடம் கூறியுள்ளார். மேலும் அதுவரை ஆரோக்கியநாதன் இங்கேயே இருப்பார் எனவும் கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதன் பின் சக்தி வேலை சாந்தி மீனா தொடர்பு கொண்டு ரூபாய் 1567000 தேவைப்படுவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து சக்திவேல் தனது நண்பர்களிடம் தொடர்பு கொண்டு மீதமுள்ள 567000 பணத்தை அனுப்ப சொன்னார். அதன்படி சக்திவேல் நண்பர்களும் ஆன்லைன் மூலம் சாந்தி மீனா சொன்ன வங்கி கணக்கிற்கு பணப்பரிவர்த்தனை செய்துள்ளனர். அதன் பின் சாந்தி மீனா சக்திவேலை தொடர்பு கொண்டு ஸ்ரீராம் நகர் பகுதிக்கு வரும்படி கூறியுள்ளார். இதன்படி சக்திவேல் அந்த பகுதிக்கு சென்றடைந்தார். பின்னர் சாந்தி மீனா ரகசிய நம்பர்லாக் கொண்ட நகை பெட்டியை சக்திவேலிடம் கொடுத்துவிட்டு ரூபாய் 1000000 பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்து நிமிடத்தில் வருவதாக கூறிவிட்டு ஆரோக்கியநாதனுடன் அங்கிருந்து சென்றுள்ளார்.
ஆனால் வெகு நேரமாகியும் சாந்தி மீனா அங்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக்திவேல் அந்த நகைப்பெட்டியை உடைத்து பார்த்துள்ளார். அந்தப் பெட்டியில் கவரிங் நகைகள் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆரோக்கிய நாதனை உடனடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவான சாந்தி மீனாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.