கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக்கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் டீக்காரமன் அமர்வில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு மற்றும் சித்தார்த் தவே, தேர்தல் வேட்பு மனுவில் தெரிவித்த சொத்து விவரங்களில் அடிப்படையில் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறியிருந்தாலும், பொதுப்படையாக எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உறவினருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கும் வேலுமணிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் உறவினர்களின் பணத்தை வேலுமணியின் பணம் எனக் கூற முடியாது என்றும் தெரிவித்த வழக்கறிஞர்கள், 2016 ஆம் ஆண்டு வேலுமணிக்கு ரூ.3 கோடி சொத்து இருந்ததாகவும் 2021 ஆம் ஆண்டு ரூ.3.3 கோடி இருந்தது. அதன் பிறகு வருமானத்திற்கு உரிய வகையில் கணக்கு காட்ட முடியாவிட்டால் தான் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு முடியும் என்றும் இந்த வழக்கில் வருமானத்துக்கு கணக்கு காட்டும் படி விளக்கம் கேட்காத நிலையில் வழக்கு பதிவு செய்தது செல்லாது என்று அவர்கள் வாதிட்டனர்.
இதனையடுத்து வழக்கில் புகார்தாரரான ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவன், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் மட்டுமே உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை என்றும் புலன் விசாரணை அதிகாரியின் விசாரணை முடிவில் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர் முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மத்திய கணக்கை தணிக்கை குழு அறிக்கை வெளியானது என்றும், அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். இந்த அறிக்கை குறித்து விசாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டு அரசு தலைமை வழக்கறிஞர் டெண்டர் ஒதுக்கீட்டின் தொடர்புடைய அதிகாரி பெயரை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்றும் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்ப கட்டம் தான் என்பதால் ஆரம்ப கட்டத்திலேயே வழக்கை ரத்து செய்ய கூற முடியாது என்று தெளிவுபடுத்தினார். அதன் பிறகு வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் 8 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தனர்.