அலுவலகங்களுக்கான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில்,
- ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை
- கிருமிநாசினி தெளித்துவிட்டு பணிகளைத் தொடரலாம்
- பெரிய அளவில் பாதிப்பு இருந்தால் 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும்
- காய்ச்சல் உள்ளிட்ட உடல்நிலை பிரச்னை இருந்தால் பணிக்கு வரக்கூடாது கட்டுப்படுத்துதல் பகுதியில் இருப்பவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்கலாம்.
- வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
- சுவாசக் கோளாறு இருக்க கூடிய அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை தான் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.