நெஞ்சுவலியால் வேனிலேயே டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமண குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பல்லடம் அருகே உள்ள தனியார் பனியன் கம்பெனியில் கடந்த 3 மாதங்களாக சரக்கு வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமண குமார் தனியார் பனியன் கம்பெனியிலிருந்து வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பொங்கலூர் அருகில் சரக்குகளை இறக்கிவிட்டு மீண்டும் கம்பெனிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமத்துவபுரம் அருகில் வந்து கொண்டிருந்த போது லட்சுமண குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சுமண குமார் சரக்கு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வேனின் ஸ்டியரிங் மீது சாய்ந்து படுத்துள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரமாக வேன் நிற்பதை பார்த்து அருகில் சென்று ஓட்டுநரை அழைத்துள்ளனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த அசைவும் இல்லாததால் இது குறித்து பல்லடம் காவல் துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வேனிலிருந்து லட்சுமண குமாரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் லட்சுமண குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் லட்சுமண குமாரின் உடலை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.