வில்லியனூர், ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல். இவர் நித்தியானந்தா பெயரில் பேக்கரி நடத்திவருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள நித்தியானந்தாவின் முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார்.நித்தியானந்தா ஆசிரமம் ஏம்பலம் பகுதியில் அமைய முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவரது பெரிய மாமியார் வசந்தா என்பவர், அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக வஜ்ரவேலுக்கு போன் செய்துள்ளார்.
வஜ்ரவேலு தனது காரை எடுத்துக்கொண்டு வசந்தா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் இருந்து 2 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனிடையே குருவிநத்தம் சமூக நலக்கூடம் எதிரில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வஜ்ரவேலின் கார் நின்றுகொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்து, பாகூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ், காரில் தலையில் பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டு நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்த வஜ்ரவேலை மீட்டுள்ளனர்.பின்னர் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து கைரேகை மாதிரி தடயங்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து உடல் கூராய்வு செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நித்தியானந்தா சீடர் சடலமாக மீட்கப்பட்ட்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.