ஈரோட்டில் முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் 30 லட்சம் ரூபாய்க்கான சொத்து ஆவணங்களும், அறுபதாயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசி ஆலைகள் சாயப்பட்டறைகள், தோல் ஆலைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் பாய்லர்களை நிறுவுதல் மற்றும் பராமரிப்பு புதுப்பித்தல் தொடர்பான சான்றுகள் வழங்கும் பொதுப்பணித்துறையின் முதுநிலை கொதிகலன் உதவி இயக்குனர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இந்த பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் பேரில் முதுநிலை கொதிகலன் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில் உதவி இயக்குனர் மகேஷ் பாண்டியிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஈரோடு சங்கு நகரிலுள்ள மகேஷ் பாண்டியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 30 லட்சம் ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆலைகளில் பாய்லர்கலை பரிசோதித்து சான்று வழங்க பத்தாயிரம் ரூபாய், போக்குவரத்துச் செலவுக்கும் 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக இதற்காக இரண்டு இடைத்தரகர்களை வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.