ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் தொடர்ந்து 9ஆவது நாளாக சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார்.. இந்த சூழலில் இலங்கையில் மரணமடைந்த அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் காணொலி அழைப்பு மூலம் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தன்னுடைய தாயுடனும், வேலூர் பெண்கள் தனிச்சிறையிலுள்ள தனது மனைவி நளினியுடனும் காணொலி அழைப்பில் பேசுவதற்கு அனுமதிக்ககோரி, கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இதுவரை 8 நாள்கள் கடந்து இன்று 9ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்க்கொண்டு வருகிறார். இதுகுறித்து பேசிய அவருடைய வழக்கறிஞர் புகழேந்தி, உண்ணாவிரதத்தை கைவிட்டு விடும்படி முருகனிடம் சிறைத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.