Categories
அரசியல் மாநில செய்திகள்

நகராட்சித் தேர்தல்…. ”தேர்தல் ஆணையத்துக்கு செக்” நீதிமன்றம் அதிரடி ….!!

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க மூன்று வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ” உள்ளாட்சிப் பதவிகள் 2016ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காலியாக உள்ளன. ஆனால், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை வழங்கிவருகிறது. தேர்தலை நடத்துவதற்கான நோக்கமே இல்லை.

தொடர்ந்து தேர்தலை தள்ளிப்போடுவதற்கான நோக்கமாகவே தெரிகிறது. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி டிசம்பர் 9ஆம் தேதி ஊரக பஞ்சாயத்துகளுக்கான, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை மாநகராட்சி, நகராட்சிகளே.

பொது சுகாதாரம், தண்ணீர், சாலை, கட்டட பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். எனவே, மாநகராட்சி, நகராட்சி பொறுப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. 15 நாள்களுக்குள்ளாக மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பாக முன்னிலையாந வழக்கறிஞர் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்துவது குறித்து பதில் அளிக்க நான்கு வார கால அவகாசம் கோரினார்.

மனுதாரர் தரப்பில், தேர்தல் ஆணையம் கால அவகாசம் கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த நான்கு வருடங்களாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

தொடர்ந்து தேர்தல் ஆணையம் கால அவகாசம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கால அவகாசம் வழங்கக்கூடாது எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திற்கு மூன்று வார கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர்.

Categories

Tech |