ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது
2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியில் ரோஹித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய டிகாக் 29 (17) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து ரோஹித் சர்மா 15 ரன்னில் வெளியேறினார்.இதையடுத்து மிடில் வரிசையில் சூர்ய குமார் யாதவ் 15, க்ருனால் பாண்டியா 7 இஷாந்த் கிஷன் 23, ஹர்திக் பாண்டியா 16 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 41* ரன்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரி) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், ஷர்த்துள் தாகூர், இம்ரான் தாஹிர் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 150 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சேன் வாட்சனும், பாப் டு பிளெசிஸும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். அதன் பிறகு அதிரடியாக விளையாடிய டு பிளெசிஸ் 26 (13) ரன்கள் எடுத்த நிலையில் க்ருனால் பாண்டியா ஓவரில் இறங்கி அடிக்க முயன்று ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இதையடுத்து வந்த வீரர்கள் ரெய்னா 8, ராயுடு 1, தோனி 2 என நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்தனர். இதனால் ஆட்டம் மும்பை பக்கம் திரும்பியது.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் சேன் வாட்சன் அரைசதம் கடந்தார். மறுபுறம் பிராவோ அவருக்கு கம்பேனி கொடுத்தார். கடைசியில் 18வது ஓவரில் வாட்சன் அதிரடியாக 3 சிக்ஸர் பறக்க விட ஆட்டம் சென்னை பக்கம் திரும்பியது. அதன் பிறகு பும்ரா வீசிய 19வது ஓவரில் பிராவோ 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா வீசிய அந்த ஓவரை ஜடேஜாவும், வாட்சனும் எதிர் கொண்டனர். முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்து சிங்கிள் எடுத்தனர்.
4 வது பந்தில்2 ரன்கள் எடுக்க முயன்று வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் (8 பவுண்டரி 4 சிக்ஸர்) எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. அடுத்து வந்த ஷர்த்துள் தாகூர் 5வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை மலிங்கா ஸ்டெம்புக்கு நேர வீச தாகூர் அதை அடிக்க முயன்று எல்.பி .டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் இழந்து 148 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், க்ருனால் பாண்டியா, மலிங்கா, ராகுல் சஹார் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். மும்பை அணி இந்த வெற்றியால் 4வது முறை கோப்பையை தக்க வைத்துள்ளது.