மருத்துவமனையில் மாத்திரைகளை திருடி வெளிச் சந்தையில் விற்பனை செய்து வந்த ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் அங்கிருக்கும் மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூபாய் 68,000 மதிப்பிலான சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் 4, 2 00 மாத்திரைகள் அங்கிருந்து திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முதன்மை மருத்துவ அதிகாரி ஆனந்தி கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் .இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை திருடி வெளி சந்தையில் விற்று வந்த மருத்துவ ஊழியர்களான ராபர்ட் ,கார்த்திகேயன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.