தனியார் பள்ளி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 10 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் எம்.ஜி.ஆர் நகர் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் 10 லட்சம் ரூபாய் பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அப்போது அந்த வாகனத்தை ஓட்டி வந்த ராஜ் குமார் என்பவரிடம் பணத்திற்கான ஆவணத்தை கேட்டபோது அவரிடம் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனை அடுத்து அதில் இருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆவடி தாசில்தார் செல்வத்திடம் அதனை ஒப்படைத்து விட்டனர்.