சொன்னதை செய்தோம்.. சொல்லாததையும் செய்தோம் என்று முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக மக்களிடம் பேசியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், காணொளியில் பேசியிருப்பதாவது, மக்களாகிய நீங்கள், இவர்களுக்கு வாக்களித்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என்று நம்பி வாக்களித்துள்ளீர்கள். அந்த வாக்குறுதியை சிறிதும் மாறாமல் நான் நிறைவேற்றிக்கொண்டிருக்கேன் என்பதை, என்னால் உறுதியாக கூற முடியும்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, திமுக வின் சார்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். அப்போது, தலைவர் கருணாநிதியின் பாணியில், “சொல்வதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம்” என்று கூறினேன். நாங்கள் ஆட்சிக்கு வந்த இன்றுடன் 4 மாதங்கள் தான் ஆகியுள்ளது.
இந்த குறுகிய காலத்திற்குள், நாங்கள் கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். கடந்த மே 17-ஆம் தேதி அன்று, பதவியேற்ற சில மணி நேரங்களில், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டேன். அவை, “2 கோடியே, 9 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் கொரோனோ நிவாரண நிதி வழங்கப்பட்டது.
ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை”, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஏற்பு, இந்த ஐந்தில் முதல் நான்குமே தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.
மேலும், வேளாண்மை உற்பத்தியை பெருக்குவதற்கும், விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காகவும் முதன்முறையாக வேளாண்மை துறைக்கு என்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக வழங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் 1200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவது. “நமக்கு நாமே” திட்டத்தை உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்துவது.
இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் என்ற உன்னத திட்டம் 2021- 22 ஆம் வருடம் செயல்படுத்துவது, அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்தல், ஒலிம்பிக்கில், தங்கப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், வெள்ளிப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு இரண்டு கோடி ரூபாய், மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குதல்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டம், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டு வழி சாலை திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் பொதுமக்கள் மீது போடப்பட்ட 5570 வழக்குகளை திரும்ப பெறப்பட்டன. மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்விலிருந்து, விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவை, பேரவையில், தாக்கல் செய்தல் மற்றும் தீர்மானம் நிறைவேற்றுதல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய், கொரோனா நோய் தொற்றால் காவல்துறையில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணத்தொகை.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்குதல், இத்திட்டத்தின் கீழ் 5,49,505 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி தொகை, மூன்று லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து தவறாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 ஆக உயர்வு, இவ்வாறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேர்தல் அறிக்கையில் கூறப்படாத பல நல்ல விஷயங்களும் செய்யப்பட்டிருக்கிறது. அவை, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இட ஒதுக்கீட்டு பிரிவுகளிலும் ஏழரை விழுக்காடு இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல், இப்படி இடம் பெற்றவர்களுக்கு கட்டணம் முழுமையாக செலுத்த வேண்டியதில்லை.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி, கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும்.
கொரோனாவால் தாய் அல்லது தாயை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண தொகை, தமிழ்நாட்டில் இருக்கும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 317, 40,00,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் என்ற புதிய அமைப்பு ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்க சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகத் துறையினரை, முன்கள பணியாளர்களாக அறிவிப்பு.
அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கான சிறப்பு ஊக்கத்தொகை 5000 ரூபாயாக உயர்வு. கொரோனா தொற்றால் உயிரிழந்த அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறையினர்களுக்கான இழப்பீட்டு தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்வு. தமிழன் மற்றும் திராவிடம் ஆகிய சொற்களை அரசியல் களத்தில் முன்னெடுத்து போராடிய அயோத்திதாசபண்டிதருக்கு மணிமண்டபம்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யின் பெருமையைப் போற்ற 14 அறிவிப்புகள், பாட்டுக்கொரு புலவன் பாரதியை போற்றும் வகையில் 14 அறிவிப்புகள், சமூக நிதியை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கக்குழு, கடந்த 1987-ம் வருடத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான சமூகநீதி போராளிகளின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூபாய் 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும்.
இந்தியாவிலேயே முன்மாதிரி திட்டமான “மக்களை தேடி மருத்துவம்” தொடக்கம், எழுத்தாளர் கி ராஜ நாராயணனுக்கு அரசு மரியாதை, கோவில்பட்டியில் சிலை மற்றும் அவர் படித்த பள்ளி புதுப்பிப்பு. தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் 5 லட்சம் பரிசுத் தொகையுடன் இலக்கிய மாமணி விருது உருவாக்கம்.
தமிழ்நாட்டை சேர எழுத்தாளர்களில், ஞானபீடம் சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் மற்றும் புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.
தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி, கலைஞரின் கனவை நனவாக்கும் வகையில், அனைத்து சாதி அர்ச்சகர்கள், பெண் ஓதுவார் நியமனம். தகைசால் தமிழர் விருது உருவாக்கப்பட்டு முதலாண்டில் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் விடுதலைப் போராட்ட தியாகியுமான தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு சிவகலை ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு தமிழர் நாகரிகத்தின் வேர்களைத்தேடி இந்திய துணை கண்டம் மற்றும் உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு.
இவை அனைத்திற்கும் மேலாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்து, சமூகநீதி உறுதிமொழி ஏற்பு. இவையெல்லாம் நாங்கள் அறிவிக்காதது ஆனால் செய்து கொடுத்துள்ளோம். சொன்னதை மட்டும் செய்யாமல் சொல்லாததையும் செய்து கொடுத்திருக்கிறோம் என்று ஸ்டாலின் நீண்ட பட்டியலை போட்டது எதிர்கட்சிகளை வாயடைக்க வைத்துள்ளது.