மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் செய்த தவறான பிரச்சாரம் வென்று விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற பிஜேபி 5 மக்களவை தொகுதியில் போட்டியிட்டது.
இதில் 5 தொகுதியிலும் தோல்வியடைந்ததோடு , அதிமுக கூட்டணியும் தோல்வியையே தழுவியது. தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. இது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்த திமுக வெற்றி பெற்று விட்டது என்று கூறினார். மேலும் அதிமுக ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் கூறியது நடக்கவில்லை அதற்காக அவர் ராஜினாமா செய்வாரா என்றும் கேள்வி எழுப்பினார்.