தர்மபுரி வாரச்சந்தையில் ஒரே நாளன்று 50 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. அப்போது சோலைக்கொட்டாய், இண்டூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஆடுகளை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனையடுத்து அதிகாலையில் இருந்து ஆடுகளை வாங்குவதற்காக பெரும்பாலான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தைக்கு திரண்டு வந்தனர்.
இதற்கிடையில் புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதாவது 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்றவாறு வெள்ளாடுகள் விற்பனையானது. இவ்வாறு நடைபெற்ற விற்பனையில் ஒரே நாளில் மட்டும் தர்மபுரி சந்தையில் 50 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. மேலும் தர்மபுரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆடு, கோழி போன்ற இறைச்சி கடைகளிலும், மீன் விற்பனை நிலையங்களிலும் வழக்கத்திற்கு மாறாக விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதிலும் பெரும்பாலான கடைகளில் இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்ட கூட்டமாக வந்தனர். இதேபோன்று பொன்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, நல்லம்பள்ளி, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதுமட்டுமின்றி ஒகேனக்கல், இருமத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள் விற்பனையானது சூடுபிடித்தது.