மின் மோட்டார் அறையில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பகுதியில் சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் கிராமம் அமராவதி ஆற்றுப் புறம்போக்கு நிலத்தில் பயன்பாட்டில் இல்லாத மின்மோட்டார் அறை உள்ளது. அங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன்பின் காவல்துறையினர் அந்த தொழிலாளியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, இறந்து கிடந்தவர் வெள்ளை கட்டம் போட்ட சட்டை மற்றும் பச்சை கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை எனவும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.