தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாகவும், தென் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பதிவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 17 செ.மீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தலா 12 சென்டிமீட்டர் மழையும், குடியாத்தத்தில் 9 சென்டிமீட்டர், சிவங்கை மாவட்டம் தேவைகோட்டை, மதுரை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டம் வானூர் ஆகிய இடங்களில் தலா ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.